Archive for February 2011
எங்க ஊர போல வருமா?
வண்டிக்கு இதவிட ஒரு நல்ல பாதுகாப்பு தேவையா என்ன???
"ஹா ஹா ஹா "
"யாருக்கு 'நானோ' கார் வேண்டும்?" (மொத்தம் எத்தனை பேர்'ன்னு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்!)
நாங்க எப்படியெல்லாம் பெட்ரோல' மிச்சப்படுத்துறோம்'ன்னு பாத்து கத்துகோங்க!
என்ன.. இதுக்கே இப்படி ஆச்சரியமா பாக்குறீங்களே, சொம்புக்குள்ள என்ன இருக்கு'ன்னு யார் கண்டா???
குளிக்காத பய புள்ளைங்கள இப்படிதான் குளிக்க வைப்போம்!
'கிடார்' வாங்கினாலும் 'கிங்ஃபிஷர்' பிளைட் வாங்குனாலும் பூஜை போட்டுதான் ஆரம்பிப்போம்.
"போட்டி னு வந்துச்சுனா என்ன வேணாலும் பண்ணுவோம்!!!"
"அடியில பாம்பு போனா கூட பரவாயில்லை. சீரியல் போயிரகூடாது."
எங்க ஊரு பில்கேட்ஸ்!
வண்டி எவ்வுளவு வெயிட்'டு தாங்குதுன்னு இப்படிதான் செக் பண்ணுவோம்!
.... சஸ்பென்ஷனையும் இப்படிதான் செக் பண்ணுவோம்!
காற்றிருக்கும்போதே தூற்றிக்கொள்!
எல்லா ஜீவராசிகளையும் உயிர்த்திருக்கச் செய்வது பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றுதான் என்று நாம் அறிவோம். இன்ஜினும், எரிபொருளும் எல்லாமும் இருந்தாலும் வாகனங்களை இயங்கச் செய்வதும் அதே காற்றுதான். 'அது'வன்றி ஓர் அணுவும் அசையாது.
மேலும் பாதுகாப்பு அம்சங்களிலும் காற்றின் பங்கு உண்டு. அதுதான் 'காற்றுப்பை'. இதனை ஆங்கிலத்தில் Airbag என்று அழைப்பர். பொதுவாக ஓட்டுபவரின்(Driver) முன்பும் பக்கத்தில் உக்கர்ந்திருப்பவர்(Co-Driver) முன்பும் இருக்கும். 'காற்றுப்பை'யில் நாம் எந்த பொருளையும் வைக்க முடியாது. ஆனா நம்ம உயிரை காப்பாத்திக்க முடியும்.
'என்னடா இவன்... ஆரம்பிச்சதிலிருந்து விஜய் படம் மாதிரி பில்டப்'தான் கொடுக்கறான்'ன்னு' நினைக்காதீங்க! நாம காரில் போகும்போது, எதிர்பாராம விபத்து நடந்துச்சினா, இந்த காற்றுப்பைகள் தானாக பலூன் மாதிரி பெருசாகி நம்ம தலை எங்கேயும் அடிப்படாம வாரி அணைத்துக்கொள்ளும்!
அப்புடி என்னாதான் அதுல இருக்குன்னு பார்ப்போம். காரின் முன்பக்கம் மோதும்போது, அங்கிருக்கும் 'மோதல் உணர்வுக் கருவி' அதனை உணர்ந்து, மடக்கி வைக்கப் பட்டிருந்த காற்றுப்பையிலுள்ள வெடி மாத்திரைகளை வெடிக்கச் செய்யும். சரியாக சொல்லவேண்டுமென்றால் விபத்து நடந்த 7 மில்லி வினாடிகளில் காற்றுப்பைகள் விரியும். (குறிப்பு: மனித மூளை விபத்து நடந்ததை 300 மில்லி வினாடிகள் கழித்துதான் உணரும்!)
'ஆடி', 'பென்ஸ்', 'பி.எம்.டபிள்யூ' முதலிய சொகுசு கார்களில் முன்பக்கம் மட்டுமில்லாமல் காரை சுற்றி ஆறு முதல் எட்டு காற்று பைகள் இருக்கும். இதற்கு நேர்மாறாக சில கார்களில் சுத்தமாக ஒரு காற்றுப்பை கூட இருப்பதில்லை! 'ஹைவே'யில் 'மாருதி 800', 'நானோ' போன்ற கார்களில் பயணிப்பது எமனுக்கு 'ஹலோ' சொல்வது போன்றது!!!
எனவே, உயிரிருக்கும்வரை தான் நம் வேலைகளை செய்ய முடியும். எனவே இந்த அவசர உலகத்தில் நாமும் அவசரமாக செல்லாமலும், பாதுகாப்பான காரை வாங்குவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
Monday, February 21
Posted by Sibhi Kumar SenthilKumar
குருவுமானவர்
பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவையும், பெண் பிள்ளைகளுக்கு அப்பாவையும் பிடிக்கும். அது போல நான் எங்கம்மா செல்லம். ஆனால் என் அப்பாதான் என்னுடைய குரு. மற்ற பிள்ளைகள் என்மீது பொறாமைப்படும் அளவிலே என் அப்பா என்னை வளர்க்கிறார். அவர்தான் என்னுடைய அறிவு பசியைத் தூண்டிக்கொண்டிருப்பவர்.
இப்போது கணினி இல்லாத இடமே இல்லை. ஆனால் என் அப்பா நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு கணினி வாங்கி கொடுத்தார். “உனக்கு என்ன பொம்மை வேண்டும்” என்று கேட்கவேண்டிய வயதில், என் அப்பா என்னிடம் “உனக்கு என்ன மென்பொருள் வேண்டும்” என்று கேட்டார்!!!
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது... நாங்கள் முதன் முறையாக கணினி வாங்கும்போது அதன் Hard Disk, 40GB திறன்கொண்டது. Ram, 216MB. அப்போது இருந்த கணினிகளில் நாங்கள் வாங்கியதுதான் அதிகபட்சமானது.
எங்கள் வீட்டில் கணினி வாங்கிய அடுத்த நான்கைந்து வருடங்களில் என் நண்பர்கள் வீட்டிலும் கணினி வாங்கத்தொடங்கினார்கள். ஆனால் அதில் முக்கால்வாசி பேருக்கு கணினி என்றால் என்னவென்று தெரியாது! பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்காமலும், பந்தாவுக்காகவும் வாங்கினார்கள்!!!
ஆனால் எங்கள் அப்பா ஏற்கனவே கணினியில் நன்கு பழகியிருந்தார். ஏனென்றால் அப்போது அவர் ஒரு அச்சகத்தில் ஒரு பங்குதாரராக இருந்தார். அங்கு ஒரு கணினி இருக்கும். அதில் யாருடைய உதவியுமில்லாமல் அவரே கற்றுகொண்டார். அப்போதெல்லாம் பள்ளி விட்டு வரும்போது அப்பா எப்போதாவது அந்த அச்சகத்தில் நின்றால், நான் உள்ளே சென்று அங்கிருக்கிற கணினியில் ‘பாம்பர்’ (Bomber) என்கிற ஒரு சிறிய கேமை விளையாடுவேன். கணினி மேலிருந்த என்னுடைய பிரமிப்பு சிறிது சிறிதாக ஆர்வமாக மாறிற்று.
கணினி வாங்கித்தந்த எல்லா பெற்றோரும், அதில் கேம் விளையாட கூடாதென்று ஆரம்பத்தில் கண்டிப்பார்கள். பிறகு, விளையாடுவதை தவிர வேறு உபயோகமற்று கிடக்கும் அவை. ஆனால் என் அப்பா என்னை கண்டிக்கவில்லை. மாறாக கணினி மூலம் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்களைக் கற்று தந்தார். ‘கணினி ஒரு விளையாட்டு பொருளல்ல’ என்பது என் அப்பா அடிக்கடி கூறுவார்.
இன்றைய தினம், என் அப்பாவிற்கு ஒரு முக்கியமான நாள். இப்போது எனக்கு 14 வயது. இதுவரை என் அப்பா எனக்கு செய்த அளவுக்கு அவருக்கு நான் எதுவும் செய்யவில்லை என்பது என்னுடைய பெரும் வருத்தம். எனவே இனிவரும் காலங்களில் அவர் விருப்பபடி நான் சாதனைகள் பல செய்து அவரை மகிழ்விப்பதே என்னுடைய ஆசை.
நான் தொடரலாமா???
இது வாசிக்கும் அனைவருக்குமான பொது கடிதம்....
02-02-2011
நெய்வேலி
இந்த ப்ளாக்'ல நாம எப்போதும் கார் மற்றும் அதற்கு சம்பந்தமான போஸ்ட் மட்டுந்தான் போடனும். ஆனா வாழ்க்கையில ஏதாவது ஒரு தருணம் ஏற்பட்டால் மட்டுமே மற்ற விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நினைத்து வந்தேன்.
ப்ளாகில் சொந்த வாழ்க்கையில் நடந்தவை மற்றும் நிதர்சன உண்மைகளையும் எழுத 'அனானி'ஆக (anonymous) இருந்தாலொழிய எழுத முடியாது என்பது என் கருத்து. அதற்கு சில உதாரணங்களாக 'இட்லி வடை' (http://idlyvadai.blogspot.com/), மற்றும் ஏகப்பட்டதை சொல்லலாம்.
அதற்காக நான் ஒரு பலப்பரிட்சை வைத்தேன். ஒரு புது கூகிள் கணக்கு உருவாக்கி ஒரு ப்ளாகை உருவாக்கினேன். இதற்கு முன்னால் நான் இரண்டு ஆங்கில வலைப்பூக்களை வைத்திருந்தேன். அதனால் என் வாழ்க்கையில் நடந்தவற்றை நான் உருவாக்கிய புதிய வலைப்பூவில் தாய்மொழி தமிழில் எழுத விழைந்தேன். அந்த ப்ளாகின் பெயர் 'தெரியாது'. (அதை நீங்கள் எங்கு தேடினாலும் உங்களுக்கு கிடைக்காது... டெலிட் செய்துவிட்டேன்!!!)
அதன் பிறகு வெறுத்துபோய் இன்னொரு ஆங்கில வலைப்பூவை உருவாக்கினேன். என்னுடைய ஆங்கில வலைப்பூக்களை யாரும் தொடர்ந்து வாசிப்பதில்லையே என்று நினைத்து அழிக்க முற்பட்டாலும் அவை வேறு எந்த தருணத்திலும் யாருக்காவது பயன்படும் என்று மனம் தடுத்தது. ஏனென்றால் அவை சமகால நிகழ்வுகளை விமர்சிப்பவை அல்ல.
ஆனால் என் தந்தை மற்றும் தாயினுடைய தமிழ் வலைப்பூக்களில் டிசைன் செய்வதும் சில சமயம் அவர்கள் எழுதியதை போஸ்ட் செய்யும்போதும் தமிழார்வம் என்னுள் வளர்ந்தது. ஒருமுறை என் தாய், "நீ ஆங்கிலத்தில் எழுதும் விஷயத்தை ஏன் தமிழில் எழுதகூடாது?" என்று கேட்டார். பின், "ஆங்கிலத்தில் கார்களைப் பற்றி எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தமிழில் யாரும் இவ்வுளவு விவரத்தோடு எழுதுவதில்லை. எனவே உனக்கு தெரிந்தவற்றை எளிய முறையில் மற்றவர்களுக்கும் தெரியவை" என்றார்.
அவர் சொல்லி விட்டு உள்ளே சென்றார். அம்மா அடுத்த ஐந்து நிமிடத்தில் வரும்போது நான் வலைப்பூவை உருவாக்கிவிட்டேன். அவர்தான் 'வட்டங்களில் சுழலுது வாழ்க்கை' என்ற தலைப்பினை பரிந்துரைத்தார். தமிழ் வலைப்பூக்களில் ஏற்கனவே பரிட்சயம் இருப்பதால் முதலிலே தமிழ் திரட்டிகளில் என்னுடைய முதல் பதிவை இணைத்தேன். முதல் பதிவே எனக்கு ஓரளவுக்கு பேர் வாங்கி தந்தது. (http://sibhikumar.blogspot.com/2010/11/blog-post.html)
என்னுடைய பதிவுகளுக்கு வரவேற்பு இருந்தாலும் அவற்றை விட மக்களுக்கு தலையாய பிரச்சனைகள் உண்டு. அதனால் சிலரைத்தவிர என்னுடைய பதிவுகளில் முழுமையாக ஒத்துபோக முடிவதில்லை என்ற உண்மை என்னை தாக்கியது.
எனவே நான் வாழ்க்கையில் நடப்பவை மற்றும் நகைச்சுவையான பதிவுகளையும், தொலைகாட்சி தொடரில் வரும் விளம்பரங்களை போல, எழுதலாமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.
எனவே உங்கள் விருப்பத்தை ஓட்டளிக்கும் மூலமாக மட்டுமில்லாமல் தங்கள் பொன்னான வார்த்தைகளால் கருத்துரை இடுங்கள்.
என்றென்றும் தங்கள் அன்புள்ள,
செ.சிபிக்குமார்