Archive for 2016

வர்தா புயலும் எனது காரும்...

         இப்பொழுது தான் வர்தா புயலிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஊர் வந்து சேர்ந்தேன். இத்தனை நாட்களும் வெள்ளம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி நிறைய படித்திருந்த நான் அவற்றை உபயோகப்படுத்தும் நாள் வந்தது. வர்தா புயலில் எனது காரை எப்படி காப்பாற்றினேன் என்பதை வரிசையாகச் சொல்கிறேன்.



** இது வீட்டில் நின்றுகொண்டிருக்கும் காரில் வெள்ளம் ஆரம்பிக்கும் முன் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

1. சுற்று வட்டாரத்தில் உள்ள உயரமான இடத்தை தேர்வு செய்யவேண்டும். சாலையில் மற்றும் மரங்கள் அருகிலும் நிறுத்துவதை தவிர்க்கவேண்டும். எங்கள் சுற்று வட்டாரத்திலே உயரமான இடம் எங்கள் அபார்ட்மெண்ட் பார்க்கிங் தான் :)) . எங்கள் அபார்ட்மெண்ட் அடுத்துள்ள வீட்டில் வசிப்பவரிடம் மூன்று கார்கள் உள்ளன. இரண்டை எப்படியோ உயரமான இடத்தில் நிறுத்தி விட்டு ஒரு காரை என்னிடம் அனுமதி பெற்று எங்கள் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் நிறுத்திக்கொண்டார்.

2. ஜன்னல்கள் கதவுகள் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளவேண்டும். பார்க்கிங் பிரேக் ஐ போட்டுவிட்டு இரண்டாவது கியரில் வண்டியை நிறுத்திவிடவேண்டும். (ஆட்டோமேட்டிக் கார் என்றால் கியரை 'P' மோடில் வைக்கவேண்டும்)

3. எக்ஸ்ஹாஸ்ட் பைப் (சைலன்சர்) முனையில் இறுக்கமாக பிளாஸ்டிக் கவரை கொண்டு கட்டிவிடவேண்டும்.

4. காரின் பேட்டரியின் டெர்மினல்களை எடுத்துவிட்டு பேட்டரியை பத்திரமாக வீட்டிற்குள் கொண்டு சென்றுவிடவேண்டும். இதனால் ஒரு வேளை வெள்ளத்தில் கார் மூழ்கினாலும் உள்ளே இருக்கும் எலெக்ரானிக் பாகங்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பி.கு. பேட்டரியை கழட்டி விட்டதால் சென்ட்ரல் லாக் மற்றும் ரிமோட் வேலை செய்யாது. எனவே ஒவ்வொரு கதவையும் திறந்து மேனுவலாக லாக் செய்யவேண்டும்.

அவ்வளவுதான்.

** வெள்ளம் முடிந்த பின் செய்யவேண்டிய நடவடிக்கைகள்.

1. வெள்ளம் வரும்போது காரில் தண்ணீர் எந்தளவுக்கு ஏறுகிறது என்பதை கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும். கவனிக்க முடியவில்லை என்றால் அக்கம் பக்கம் உள்ளபவர்களை விசாரிப்பது நல்லது. பானெட்டை திறந்து இன்ஜின் ஆயில் டிப் ஸ்டிக் ஐ எடுத்து பார்க்கவேண்டும். வழக்கத்திற்கு மாறாக அளவு அதிகமாக இருந்தால் தண்ணீர் உள்ளே புகுந்துவிட்டது என்று அர்த்தம். கூடவே அனைத்து ஆயில்களின் (பவர்ஸ்டீரிங் ஆயில், பிரேக் ஆயில், கூலண்ட்) அளவையும் பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் சரியாக இருந்தால் ஓகே.

2. வண்டியை சுற்றி ஏதேனும் வெளிப்புற டேமேஜ் இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். என் பக்கத்து வீட்டுக்காரரின் கார் எனது காரின் மீது சாய்ந்து ஒரு டொக்கு விழுந்துவிட்டது. பெரிய டேமேஜ் இல்லையென்றால் பிரச்சனையில்லை.

3. எக்ஸ்ஹாஸ்ட் (சைலன்சர்) பைப்பில் கட்டியிருந்த கவரை கழட்டிவிடவேண்டும். 

4. பேட்டரி டெர்மினல்களை கனெக்ட் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்து பார்க்கவேண்டும். எல்லா உபகரணங்களும் (ஏசி, மியூசிக் பிளேயர், வைப்பர், பவர் விண்டோஸ் போன்றவை) வேலை செய்கிறதா என்பதை செக் செய்துக்கொள்ளவேண்டும். ஒரு நிமிடம் காரை ஐடிலிங்கில் வைக்கவேண்டும்.

கார் தப்பித்தது.

** கார் மூழ்கியிருந்தால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்.

1. காரை எக்காரணத்தை கொண்டும் ஸ்டார்ட்செய்யக்கூடாது.

2. காரை இன்ஷ்யூர் செய்திருந்த நிறுவனத்திற்கு தகவல் அளித்து அவர்களின் வழிமுறைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பி.கு. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மட்டும் எடுத்திருந்தால்  இந்த பாயிண்டை மறந்திடுங்கள். காரை நம் காசிலே சரி செய்துக்கொள்ளவேண்டும்.

3. காரின் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து காருக்கு ஒரு அப்பாயின்மென்ட் வாங்கவேண்டும்.

4. அவர்கள் குறித்த நேரத்தில் காரை டோ (Tow) செய்துக்கொண்டு போவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

ஆகமொத்தம் இந்த புயலில் ஒரு டொக்குடன் தப்பித்தது என் மேரியோ (Mario). ஃபியட் புன்டோ என்ற பெயரில் தயாரித்த என் காருக்கு நான் வைத்திருக்கும் பெயர் மேரியோ.

Wednesday, December 14
Posted by Sibhi Kumar SenthilKumar

டயர் வெடிபபு - தவிர்ப்பது, தப்பிப்பது எப்படி?

     பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம். 

இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி வந்த கார்  நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 


இதில் காரில் பயணித்த ஐந்து நபர்களும் லாரியின் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த ஒரு பெண்மணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான சுமார் 15 லட்சம் மதிப்புள்ள டாடா சஃபாரி ஸ்டார்ம் கட்டுமானத்தில் உறுதியான கார் தான். ஆனாலும் விபத்தில் எப்படி நொறுங்கியிருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

"பாதுகாப்பாக தான் செல்கிறோம். ஆனால் அதீத வெயிலில் டயர் வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்??" என்று பலர் நினைக்கிறார்கள், அதுதான் இல்லை. சூரிய வெப்பத்தை தவிர நிறைய காரணங்கள் உண்டு.

டயர் வெடிப்பதற்கான காரணங்கள்

     
1. டயர்களில் பரிந்துரைக்கப்பட்ட காற்றழுத்தத்தைவிட குறைவாக இருப்பது. குறைவான காற்றழுத்தம் இருந்தால் டயரின் பக்கவாட்டு சுவர்கள் வளைந்து டயரின் அமைப்பை குலைக்கும். இதனால் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்பிற்கு உள்ளாகிறது. மாதத்திற்கு ஒருமுறையோ நீண்ட பயணத்திற்கு முன்போ டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது நல்லது. நிறைய தூரம் காரில் பயணித்தப்பின் காற்றழுத்தத்தை பரிசோதித்தால் வெப்பத்தால் அளவில் வித்தியாசம் ஏற்படும். அதனால் பயணத்தை துவங்கிய போதோ அல்லது துவங்கிய 2-3 கி.மீட்டர்களிலோ பரிசோதிப்பது நல்லது.



     2. டயரின் பக்கவாட்டில் வெட்டு/வீக்கம் ஏற்பட்டிருப்பது மற்றும் சமமில்லாது தேய்ந்துப்போன டயர்கள். அவ்வாறு சிறு சிறு சேதமிருக்கும் டயரோடு நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது சேதம் பெரிதாகும். இதனால் டயரின் அமைப்பு குலைந்து டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மாதம் இருமுறையாவது அனைத்து டயர்களையும் கவனியுங்கள். ஏதேனும் சேதமோ அல்லது சமமில்லாது தேய்ந்துப் போயிருந்தாலோ யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.



   3. அதிக வேகம் மற்றும் அதிக எடையை காரில் ஏற்றுவது. அனைத்து டயர்களுக்கும் அதிகபட்ச வேகம் மற்றும் எடை ஆகியவற்றை நிர்ணயித்திருப்பார்கள். அதனை தாண்டும்போது டயர் வெடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக கார் தயாரிப்பாளர்கள் /போக்குவரத்து துறை அனுமதித்த அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கையை கடைப்பிடிப்பது நல்லது. (எ.கா. டாடா இண்டிகா- 4+1 , டொயோட்டா இன்னோவா- 7+1). நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை டயரை பார்த்தே சொல்லிவிடலாம்.




உங்கள் டயரின் பக்கவாட்டிலுள்ள குறியீடுகளின் விரிவாக்கம் 

Speed Rating க்கான வேக அளவீடு

ஒரு வேளை நீங்கள் ஓட்டும்போது திடீரென்று டயர் வெடித்தால் என்ன செய்யவேண்டுமென்று பார்ப்போம்.

முதல் முக்கியமான விஷயம். எக்காரணத்தைக் கொண்டும் ப்ரேக்'ஐ அழுத்தவேண்டாம். அச்சமயத்தில் அனைவரும் செய்யும் பெரும் தவறு இதுதான்.

முன் பக்க டயர் வெடித்தால் அதிர்வுகளோடு எந்த பக்க டயர் வெடித்ததோ அந்த பக்கத்திற்கு வண்டியை இழுக்கும். பின் பக்க டயர் வெடித்தால் பெரும் அதிர்வுகளோடு காரை திருப்பிவிடும். எனவே ஸ்டீரிங் ஐ கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. எனவே பதட்டப்படாமல் ஆக்சிலேட்டர் லிருந்து காலை எடுத்துவிட்டு காரின் திசையை கட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

ஸ்டீரிங் உங்கள் கட்டுக்குள் வந்த பின்பு, வண்டியின் வேகம் குறைந்தப் பிறகு ப்ரேக் ஐ அழுத்தலாம்.

பி.கு. சீட்பெல்ட் போடுபவர்கள் இவ்வகையான விபத்துகளிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் மேலானோர் உயிர்ப் பிழைக்கிறார்கள். எனவே வாசகர்களே... 

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -